ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர். அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.
அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். “அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி….” என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்:
“ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?”
துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.
திருவள்ளுவரின் புரட்சி அதிகாரங்களுள் ஒன்று.
இன்னாசெய்யாமை எனும் அதிகாரம் நாலடியாரில் இடம் பெறவில்லை.
இரும்பு ஆர்க்கும் காலர் ஆய் ஏதிலார்க்கு ஆள் ஆய்
கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் : சுரும்பு ஆர்க்கும்
காட்டுள் ஆய் வாழும் சிவலும் குறும்பூழும்
கூட்டுள் ஆய்க் கொண்டு வைப்பார் (122)
என்ற பாடலில் பறவைகளைக் கூண்டுகளில் அடைத்துப் போடுகிறவர்.தொடர் பிறவிகளில் கால் விலங்குகள் பூட்டப் பெற்ற அடிமைகளாய்த் துன்புறுவர்.இக்கால சமுதாயத்திலும் கூண்டில் பறவைகளை அடைத்து துன்புறுத்தும் செயல் நடைப்பெற்று கொண்டிருக்கிறது.பொதுவாக கூண்டில் பறவைகளை அடைப்பது குற்றம். கால்களில் இரும்பு விலங்கு பூட்டப்பெற்று அடிமைகளாக நிலத்தில் மக்கள் வேலை செய்துள்ளனர்.வினைக் கொள்கையை முன்னுறுத்தி மக்களைத் தவறு செய்வதிலிருந்து தடுத்துள்ளனர் என்பது அறியமுடிகிறது.
பழமொழி நானூற்றில் இன்னா செய்யாமை என்னும் பகுதியில் எளியவருக்கும், வறுமையார்க்கு ஒரு துணையும் இல்லார்க்கு இன்னா செய்யக் கூடாது.(43,44)
மற்றவர்க்கு மனத்தினால் கூட துன்பம் செய்யக் கூடாது. செய்தால் காலைப் பொழுதில் கேடு இழைத்தான் எனில் அதன் அடித்தடம் மாறும் முன்பே மாலையில் அவனைக் கேடு வந்து சூழ்ந்து கொள்ளுதல் உறுதி என்பதை,
நெடியது காண்கலாய், நீ அளியை நெஞ்சே
கொடிதே கூறினாய் மன்ற – அடியுளே
முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன்கேடு
பிற்பகல் கண்டு விடும் (பழ.47)
என்ற பாடலில் அறியமுடிகிறது. மேலும் அறிவு,செல்வம் இரண்டும் உடையாரைத் துன்புறுத்துதல் கூடாது (48) என்று எடுத்துரைக்கப்படுகின்றது.
மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை
ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்
நற்கெளி தாகி விடினும் நளிர்வரைமேல்
‘கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்’. (48)
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். (311)
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். (312)
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும். (313)
டால்ஸ்டாயின் உள்ளம் கவர்ந்த குறள் சிந்தனை மேதை டால்ஸ்டாயின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த நுாலாகத் திருக்குறள் திகழ்ந்தது. டால்ஸ்டாய் ‘இந்து ஒருவருக்கு’ என்னும் தலைப்பில் எழுதிய கடிதத்தில் திருக்குறள் காட்டும் வாழ்க்கை நெறியைச் சுட்டிக்காட்டியுள்ளார்; ‘இன்னா செய்யாமை’ அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஆறு குறட்பாக்களை மேற்கோள் காட்டி, தம்முடைய உள்ளத்தைக் கவர்ந்தனவாகக் குறிப்பிட்டுள்ளார்.
“ஒருவன் தனக்குத் தீங்கு செய்தவர்களைத் தண்டிப்பதற்கு உரிய சிறந்த வழி, தீங்கு செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்களுக்கு நன்மை தரும் செயல்களைச் செய்து, அவர்கள் செய்த தீங்கினையும், தான் செய்த நன்மையினையும் மறந்து விடுவதே ஆகும்” என்ற கருத்தினைப் புலப்படுத்தும் வகையில் அமைந்த குறட்பா வருமாறு:“ இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல்.”இக்குறட்பா உளவியல் நுட்பம் வாய்ந்ததாக டால்ஸ்டாய் குறிப்பிட்டுள்ளார்.
பழிவாங்கும், கொடுமை இழைக்கும் மனமுடையோருடைய நெஞ்சு கொதித்து நிற்கும்; அறவுரை – அறிவுரைகள் யாதொன்றும் அவர்கள் காதில் ஏறாது. ஆதலால் முதலில் இவனுடைய சினத்தைத் தணிக்க வேண்டும். அவன் சினந்தணிந்த நிலையில் கேட்கத் தகுதியுடையவன் ஆவான்; சிந்திக்க முயற்சி செய்வான். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் முதற்பணி சினந்தணிக்கும் பணியே.
எப்போதும் கெட்டவர்களைத் திருத்துவதற்குரிய ஆற்றொணாச் சினத்தில் மூழ்கி இருப்போரைத் திருத்துவதற்குரிய முதல்விதி அவர்களை மறுக்காமல் முதலில் அவர்களுடன் கொஞ்சம் உடன்பட்டு நிற்றல் வேண்டும் என்பது. இஃது உளவியல் அடிப்படையின் வாய்ப்பாடு.
முதலில் கெட்டவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள்; திருந்துவார்கள். வாழ்க்கையும் பயனுடையதாகும்.
“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” (திருக்குறள் – 314) என்ற திருக்குறளை நோக்குக. இந்தத் திருக்குறளில் “ஒறுத்தல்” “அவர்நாண” என்ற சொற்கள் உடன்பாட்டுச் சொற்கள். இந்தச் சொற்களைக் கையாள்வதன் மூலம் பழிவாங்கும் உச்சாணிக் கொம்பிலிருப்பவன் இறங்கி வருவான்.
அவனுடைய சினம் தணியும் . பழிவாங்கும் மனப்போக்கிலும் மறு ஆய்வு தலைகாட்டும். இந்த இதமான – இங்கிதமான சூழ்நிலையில் அவனுக்கு ஒரு நன்மை செய்தால் மகிழ்வான்; மாறுவான்; என்றும் நல்லவனாக இருப்பான்.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (314)
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. (குறள் 987)
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை. (குறள் 469)
அறிவு ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். ஆனால் இன்னா செய்யாமை என்கிற அறம் ஆக்கம் மட்டுமே தரும். அதனைப் பின்பற்றுபவர்க்கு அழிவே தராது.
அறிவு இருந்தும் என்ன பயம்? பிறர் துயரத்தைத் தன் துயரமாகக் கருதி அதனை நீக்கப் பாடுபடாத அறிவினால் என்ன பயன்? அறிவாளிகளால் பயனில்லை. இந்த உலகிற்கு அறச் சிந்தனையாளர்களால் மட்டுமே பயன்! அறச்சிந்தனையுடன் கூடிய அறிவே பயன்மிக்கது என்ற அறநெறிமேம்பாட்டை இந்தக் குறளின் வழி காட்டுகிறார் வள்ளுவர். இதனை அறிந்து செயல்படும் நிலையில் உலகம் இனியதாய் அமையும்.
அறிவை விட சிறந்தது இன்னா செய்யாமை அறம் என்கிறார் வள்ளுவர்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. (315)
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். (316)
“ஐயா, இவன் மூக்குல குத்திட்டான்யா!” என்று அழுதபடியே கேட்டது ஒரு மாணவனின் அலறல்.
முகம் நிறைந்த கோபத்துடன் பக்கத்திலிருந்தவனைப் பார்த்து,
“ஏன் அடிச்சே? எத்தனை தடவை சொல்றது யாரும் யாரையும் அடிக்கக் கூடாதுன்னு!” என்று கத்தினேன்.
“என் முதுகில் குத்தினான்யா!” என்று பதில் சொன்னவனின் முகம் பாதி அழுகை காட்டியது.
“ஒருத்தன் வேணும்னே அடிச்சாகூட, “ஏன் அடிச்சே? எனக்கு வலிக்குது. உன்னை மன்னிச்சிடுறேன். இனிமேல் இப்படிச் செய்யாதேன்னு சொல்லுங்கன்னு சொல்லிக்கிட்டேதானே இருக்கேன்” என்றேன். இதைச் சொல்லும்போதே என் மனத்தில் பல்வேறு எண்ணங்கள்.
சொல்லும் செயலும்
ஆண்டு முழுவதும் தினசரி சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஒரு பாட வேளைக்குள் எத்தனை சண்டைகள். இதற்கு என்னதான் தீர்வு?
ஆனால் ஒன்று!
“ஏன் அடித்தாய்?” என்று கேட்டபோது எனது முகத்தில் நிறையக் கோபம்தானே இருந்தது! அதை எவ்வளவு கடுமையான வார்த்தைகளில் காட்டினேன். அவன் குழந்தை. செயலில் காட்டிவிட்டான்.
பெரியவர்கள், குழந்தைகள் முன்பாக அன்பாக நடந்துகொண்டால் நம்மைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அப்படியான சூழல் பள்ளியிலும் வெளியிலும் இருக்கிறதா? குழந்தைகளிடம் அன்பைக் குறித்துப் பேச வேண்டும். மீண்டும் மீண்டும் சொல்லிலும் செயலிலும் அன்பைக் காட்டவேண்டும். அன்பே அனைத்தையும் மாற்றும் சக்தி. “மாணவர்களே! மூன்றாம் பருவத்தில் இரண்டு இயல்கள் இதைத்தான் அதிகம் சொல்லுகின்றன” என்று சொல்லியபடியே கரும்பலகையில் ‘அன்பு’ என்று எழுதினேன்.
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. (317)
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். (318)
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். (319)
“குற்றம் கடிதல், கொடியாரை ஒறுத்தல், இன்னா செய்தாரை ஒறுத்தல் என்று எடுத்தியம்பும் திருக்குறளில், மன்னித்தல் என்ற சொல்லோ, எண்ணமோ காணப்படவில்லை. ” என்கிறார் முனைவர் முனைவர் செ. நாராணயசாமி (வள்ளுவத்தின் மீட்சி பக்கம் 154) மேலும், “பிறரைத் துன்புறுத்தும் குற்றம் செய்பவர்கள், அதன் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும். பிறருக்கு அதனைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் நன்றே எனினும் மன்னித்தல் இயலாதது”
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். (320)
நன்றிக்குரியோர்:
https://ilakkiyam.com/73-tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4190-inna-seyamai
https://www.dinamalar.com/news_detail.asp?id=1199251
http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-5114.html