தமிழர் சமயம்

திருவள்ளுவர் கிறித்தவரா? நூல் பிறந்த கதை

என்னுடைய திருமணத்திற்கு முன்பு பொருளாதாரத்தில் சிக்கலான வாழ்க்கையாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகு அந்தச் சிக்கல் கொஞ்சம் குறைந்து விட்டது. நான் விரும்பிச் சென்று பெண் பார்த்து திருமணம் செய்யவில்லை. திருமணம் செய்து கொள்ளுமாறு நான் வழிநடத்தப்பட்டேன். இது கடவுளுடைய அருள் என்று நான் நம்புகிறேன். என் மனைவி மிகச்சிறந்த குணவதியாக இருந்ததால், நன்மைக்கு ஏதுவாகவே இருந்தது.

திருமணம் முடித்த பின், நானும் என் மனைவியும் பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியின் கிளையாக இருக்கும் பள்ளிகளுள் ஒன்று, ஆழ்வார்க்குறிச்சியில் இருந்தது. அங்கு நானும் என் மனைவியும் பணியமர்த்தப் பட்டோம். என் மனைவி பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள். நான் கருப்பு, அவர் மஞ்சள். நாங்கள் இருந்த தெரு, சூழல் ஆகியவற்றைப் பார்த்து, வீட்டுக்குச் செய்தித்தாள் கொடுப்பவர், தெய்வநாயகம் பிள்ளை என்று எழுதுவார்.

தமிழ்ப்பற்று எப்படி வந்தது?

தமிழ் மேல் அதிகப்பற்று வரக் காரணம் ஆழ்வார்க்குறிச்சியில் இருந்த திருவள்ளுவர் கழகம். அங்கு பொன்னையா பிள்ளை என்பவர் பொறுப்பாளராக இருந்தார். என்னைத் திருவள்ளுவர் கழகத்தில் பேசச் சொல்லி அவர் வற்புறுத்திக் கூட்டிச் செல்வார். ஏற்கெனவே, கால்டுவெல் பள்ளியில் விருப்பப் பாடமாகச் சிறப்புத் தமிழைப் படித்திருந்தேன். அப்போதே எனக்கு மிகுந்த விருப்பம், தமிழ் மேல் இருந்தது. ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகம், திருக்குறளை அதிகம் நான் தெரிந்து கொள்ள வழி வகுத்துக் கொடுத்தது. பொன்னையாபிள்ளைக்குக் காது சற்று மந்தம். அவருக்குக் கேட்பதற்காகவே, சத்தமாகப் பேசி, சத்தமாகப் பேசி, நான் நன்றாகப் பேசத் தொடங்கினேன்.

தமிழாசிரியராக எப்படி மாறினேன்?

இதன் விளைவாக, எனக்கு ஓர் ஆசை வந்தது. அது வரை, நான் நடுநிலைப் பள்ளி ஆசிரியராக இருந்தேன். தமிழாசிரியராகப் படிக்க வேண்டும் என்னும் ஆசை வந்தது. 1965இல் தமிழாசிரியர் தேர்வில் வென்றேன். தமிழுக்குப் படிக்கத் தொடங்கும் போதே, இயேசு பெருமானின் ஊழியத்திற்கு இந்தத் தமிழ் பயன்பட வேண்டும் என்று ஒப்புக்கொடுத்து, நானும் என் மனைவியும் கடவுளை வேண்டித் தான் படித்தேன். பிறகு, சென்னைக்குச் சென்றால் ஊழியத்திற்கு நன்றாக இருக்குமே என்று எண்ணி 1966 பிப்ரவரி 1ஆம் நாள் சென்னைக்கு வந்தோம்.

‘வேறு வேலை தேடிச் சென்னைக்குப் போவார்கள். இவர்கள் ஏன், இதே ஆசிரியர் வேலைக்கு எதற்காகச் சென்னை செல்கிறார்கள்?’ என்று என்னுடைய உறவினர்கள் சிந்தித்தார்கள். சென்னையில் இரயில்வே உயர்நிலைப்பள்ளி நேர்காணலில் கலந்து கொண்டோம். அதில், நாங்கள் இருவருமே ஆசிரியர்களாகச் சேர்ந்தோம். ஓய்வு நேரங்களில், இயேசு பெருமானின் நற்செய்தியை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்னும் உணர்வு எப்போதும் எனக்கு இருக்கும். இதனால், நண்பர்களுடன் இணைந்து நற்செய்தி ஊழியம் செய்யத் தொடங்கினோம்.

இப்படி வேப்பேரியில் ருத்ரன் சாலையில் ஒரு நாள் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அந்தச் சாலையில் நிறைய சர்ச்கள் இருந்தன. இப்படிப் பல பிரிவுகள் இருக்கின்றனவே! இவர்கள் எல்லோரும் சேர்ந்து நின்றால், எவ்வளவு நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. அந்தச் சாலையின் கடைசியில் நான் போய் நின்ற போது என் கண்களில் கண்ணீர் தான் இருந்தது.

இப்படிச் சிந்தித்துத் தான் United Christians Organization என்னும் அமைப்பை உருவாக்க நினைத்து, பல கிறிஸ்தவ அமைப்புகளிடம் போய்ப் பேசினேன். பலரும் வரவேற்றார்கள். அதன் தலைவராக, சாம்சன் இருந்தார். நான், செயலாளராக இருந்தேன். இயேசு பெருமானின் இரட்சிப்பை மக்களிடம் கொண்டு செல்ல, என்ன செய்வது என்று சிந்தித்தோம். இயேசு பெருமான், வரலாற்று மனிதராகவும் இருக்கிறார். ஆனால், அவர் உயிர்த்தெழுந்ததைப் பாடப்புத்தகத்தில் எழுதுவதில்லை. இதைச் சிந்தித்து, மெரினா கடற்கரையில் சீரணி அரங்கில் (இப்போதைய திருவள்ளுவர் சிலைக்குப் பின்னர்), ஈஸ்டர் அன்று கூட்டம் நடத்த முடிவு செய்தோம்.

திருவள்ளுவர் கிறித்தவரா? புத்தகம் எப்படி வந்தது?

கிறிஸ்தவத் தலைவர்கள் பலரையும் அழைத்தோம். எல்லோரும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார்கள். பெரிய அளவில் மாநாடு போலக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தோம். அந்தக் கூட்டத்தில், ஒரு தலைவர் மட்டும் வரவில்லை. அவர் வராததால், என்னைப் பேசச் சொன்னார்கள். மாலையில் பேச வேண்டும் என்பதால், அங்கிருந்த சாரணர் அரங்கத்தில் உட்கார்ந்து சிந்தித்தேன். இயேசு பெருமானைப் பற்றிப் பேசக் குறிப்பு எடுக்கத் தொடங்கினேன். பைபிள் வசனங்களை யோசிக்கத் தொடங்கினால், திருக்குறள் பாக்கள் என் மனத்தில் வந்து கொண்டே இருந்தன. ஏன் இப்படித் திருக்குறளாக வருகிறது என்று எழுந்து நின்றேன். அங்கிருந்து சாந்தோம் பேராலயம் தெரிந்தது. சாந்தோம் பக்கத்தில் தானே திருவள்ளுவர் சிலையும் இருக்கிறது என்றும் எனக்குத் தோன்றியது.

இப்படியாகச் சிந்தித்துக் கொண்டே, ‘திருக்குறள் கிறிஸ்தவ அடிமரத்தின் ஒரு கிளை’ என்று மேடையில் பேசி விட்டேன். சிலர் என் பேச்சைப் பாராட்டினார்கள். ‘மேடை கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா? திருவள்ளுவர் காலம் கி.மு. 31 அல்லவா?’ என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் திருக்குறள் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் எல்லாவற்றையும் வாங்கினேன். ‘திருக்குறள் கிறிஸ்தவ நூல் இல்லை’ என்பதற்கான சான்றுகளைத் திரட்டுவோம் என்று நினைத்தேன். ஆனால், நான் நினைத்ததற்கு மாறாக, ‘திருக்குறள் கிறிஸ்தவ நூல்’ என்பதற்கான சான்றுகள் தான் எனக்குக் கிடைத்தன. இப்படித் தான் ‘திருவள்ளுவர் கிறிஸ்தவரா?’ என்று நூல் எழுதினேன். இது என்னுடைய வெற்றுக் கற்பனையோ என்னும் ஐயத்தில் பெரிய அறிஞர்களிடம் இதை வாசித்துக்காட்டி, அவர்கள் சொல்லும் திருத்தங்களைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் வந்தது.

திருவள்ளுவர் கிறித்தவரா? எழுதிய பின் சந்தித்த அவமானங்கள்

அப்சலம் அவர்கள் United Chrisitians Organization இன் தலைவராக இருந்தார். இலயோலா கல்லூரியில் அருள்தந்தை முனைவர் இராஜமாணிக்கம் அவர்களைப் போய்ப் பாருங்கள் என்று அவர் கடிதம் கொடுத்தார். நான் இராஜமாணிக்கம் அவர்களைப் போய்ப் பார்த்தேன். ‘ஐயா! திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்னும் கோணத்தில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். பாருங்கள்’ என்றேன். ‘திருவள்ளுவர் கி.மு. 31இல் பிறந்தவர் என்று அரசே சொல்கிறதே!’ என்று அவர் சொன்னார். நான் புத்தகத்தை வாசித்துக் காட்டியதில் அவருக்கு விருப்பம் இல்லை. கோபப்பட்டு, அறை விளக்கை அணைத்து விட்டார். ‘நீ இப்படி எழுதியிருப்பதால், இந்து கிறிஸ்தவ மதச் சண்டை வந்து விடும்’ என்று அவர் சொன்னார். அவர் பேசப் பேச, ‘நான் எழுதியதையே படிக்காமல் இப்படிப் பேசுகிறாரே’ என்று எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.

பிறகு, இன்னொரு அருள்தந்தையைப் பார்க்க வேண்டும் என்று உட்கார்ந்திருந்தேன். அந்த அருள்தந்தையும் என்னுடைய புத்தகத்தைப் படிக்க மறுத்துவிட்டார். இப்போது என்ன செய்வது என்று சிந்தனையும் தயக்கமும் வந்தது. Christian Literature Societyக்குப் போகலாம் என்று நினைத்தேன். ‘இந்தத் தலைப்புக்கு அறிஞர்களைக் கூப்பிட்டால், அறிஞர்கள் வர மாட்டார்கள்’ என்று அவர்களும் சொல்லி விட்டார்கள்.

‘எப்படியாவது இந்தக் குறிப்புகளைப் புத்தகமாக்க வேண்டும்’ என்று என் மனைவியுடன் கலந்து பேசினேன். ஆனால், புத்தகமாக்குவதற்கு நிறைய காசு தேவைப்பட்டது. எனவே, இதைப் பற்றி, United Chrisitians Organization அமைப்பிடம் பேசினேன். அச்சுக்குத் தாள், எழுத்து ஆகியவற்றைக் கடனாக வாங்க நாங்கள் உதவி செய்கிறோம். புத்தகம் வெளி வந்த பிறகு, நீங்கள் காசு கொடுங்கள் என்று அவர்கள் உதவினார்கள்.

தாலியை அடகு வைத்தோம்

முதலில் மூன்றாயிரம் புத்தகங்கள் அச்சிட்டோம். அச்சிட்ட புத்தகங்களை வெளியே எடுக்கப் பணம் இல்லை. ‘உன் நகைகளை அடகு வைத்து, இவற்றைச் செய்யலாமே’ என்று மனைவியிடம் சொன்னேன். என் மனைவியின் எல்லா நகைகளும் சேர்த்தும் பணம் போதுமானதாக இல்லை. தாலியையும் சேர்த்தால் தான் பணத் தேவையை நிறைவேற்ற முடியும் என்னும் நிலையில் தாலிக் கொடியையும் எடுத்துக் கொண்டோம். அதற்குப் பதிலாக, முனை முறியாத மஞ்சளை மனைவியின் கழுத்தில் கட்டி விட்டு, தாலிக் கொடியை அடகு வைத்தோம். இப்படியாகப் புத்தகம் கைக்கு வந்தது.

‘இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை வாங்க நினைத்து, மீண்டும் United Chrisitians Organization அமைப்பில் உள்ள நண்பர், தனபாண்டியன் (ஆபிரகாம் பண்டிதரின் பேரன்) அகில இந்திய வானொலியில் வேலை செய்து வந்தார். அவர் அகில இந்திய வானொலியில் வேலை செய்து வந்தார். அங்கு, ஒரு பெரிய எழுத்தாளரைப் போய்ப் பார்த்தேன். அந்த எழுத்தாளர், ‘திருவள்ளுவர் சமணர், பெளத்தர்’ என்று சொல்லலாம். கிறிஸ்தவர் என்று சொல்ல முடியாது’ என்றார் அவர். ‘சரி, படித்து விட்டுச் சொல்கிறேன், ஒருவாரம் கழித்து வாருங்கள்’ என்றார். ஒருவாரம் கழித்துப் போன போது, தனபாண்டியனை மாடிக்குக் கூப்பிட்டு, ‘இந்தப் புத்தகத்தை எழுதியவர் மூஞ்சியிலேயே விழிக்க விரும்பவில்லை’ என்று சொல்லி விட்டார். இதற்கு முன்பே, ‘நான் ஒரு சிறுகதை எழுத்தாளர். என்னிடம் முன்னுரை வாங்குவதை விட, பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் அ.மு. பரம சிவானந்தத்தைப் போய்ப் பார்க்கச் சொல்லியிருந்தார்’.

அவரைப் பார்க்கப் போகலாம் என்று கிளம்பினோம். அப்போது, தனபாண்டியன், சாந்தோம் சர்ச்சில் உள்ள அருள்தந்தை அடைக்கலத்தைப் பார்க்கக் கூட்டிப் போனார். சர்ச்சிற்கு முன்பு, ஆர்ச் பிஷப் இல்லம் இருந்தது. ‘இங்கே இருக்கும் ஆர்ச் பிஷப், முன்பு அ. இ. வானொலியில் பேசியிருக்கிறார். வாருங்கள், இவரைப் போய்ப் பார்க்கலாம்’ என்று கூட்டிப் போனார். நாங்களும் ஆர்ச் பிஷப்பைப் போய்ப் பார்த்தோம். நாங்கள் பார்த்த போது, அவர் திருக்குறள் படித்துக் கொண்டிருந்தார். ‘ஐந்தவித்தான் என்னும் சொல், இயேசு பெருமானுக்கு மட்டும் தானே பொருந்தும்’ என்று மாணவர்களுக்குத் திருக்குறள் சொல்லிக் கொடுக்கும் போது எனக்குத் தோன்றியிருக்கிறது’ என்று அவர் சொன்னார்.

பிறகு, ‘நீங்கள் நூலின் முடிவாக, என்ன சொல்லியிருக்கிறீர்கள்?’ என்றார். ‘திருவள்ளுவர் கிறிஸ்தவர், ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்’ என்பது தான் முடிவு’ என்றேன். அவர் சிரித்து விட்டார். பிறகு, ‘வான், நீத்தார்’ என்று பல கேள்விகள் கேட்டார். இப்படிப் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு, ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார்.

ஒரு வாரம் கழித்துப் போனேன். ‘உங்கள் புத்தகங்களைப் படித்தேன். ஒரு கிறிஸ்தவச் சொற்பொழிவாளர் எழுதிய புத்தகம் போல இருக்கிறது. மிக மிக வேகமாக முடிவு சொல்லியிருக்கிறீர்கள். இனி நீங்கள் எழுதும் போது, என்னிடம் கொண்டு வாருங்கள். அதை ஆராய்ச்சி நூலாக மாற்றுவோம்’ என்று அவர் சொன்னார். இதை என் மனைவியிடம் சொன்னேன். மகிழ்ச்சியடைந்த மனைவி, ‘புத்தகம் எழுதுங்கள். ஆனால், அச்சாக்க வேண்டாம். ஏனென்றால், அவ்வளவு வசதி நமக்கு இல்லை’ என்று பதில் சொன்னார்.

கடவுளின் வழிநடத்தல் – மனைவியின் மகிழ்ச்சி:

இந்த நேரத்தில், ஆர்ச் பிஷப்பிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. ‘இனி நீங்கள் எழுதும் புத்தகங்களை ஆராய்ச்சி நூலாக நாம் மாற்றுவோம். அதை அச்சிடத் தொடங்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று அவர் எழுதியிருந்தார். இதைப் பார்த்து, என் மனைவிக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி. ‘அச்சிட முடியவில்லையே என்று யோசித்தோம். கடவுளே இதை நடத்துகிறார்’ என்று அவர் சொன்னார்.

புத்தகத்திற்கு முன்னுரை வாங்க, பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் அவர்களைப் போய்ப் பார்த்தோம். அங்கு அருள்தந்தை இராஜமாணிக்கம் இருந்தார். அவர் ‘இங்கேயும் வந்துவிட்டாயா?’ என்று கேட்டார். நான், அவரிடம், ‘புத்தகத்தைப் படிக்காமல், கருத்து சொல்வது எப்படி அறிவாளித்தனம்?’ என்று கேட்டேன். பிறகு, அ.மு. பரமசிவானந்தம் அவர்களிடம் ‘நீங்கள், உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதிக் கொடுங்கள்’ என்று கேட்டேன்.

பிறகு, கலைஞரிடமும் நண்பர்கள் மூலம் முன்னுரை வாங்கினோம். அப்போது கல்வியமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் புத்தகத்தை வெளியிட்டார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்தோசம் என்னுடைய நண்பர். அவரும் புத்தகத்தை மிகுதியாகப் பாராட்டினார்.

மாணவர் கேள்விகள்:

திருவள்ளுவர் கிறித்தவரா புத்தகத்தில் இந்து மதத்தைப் பற்றி நீங்கள் சொல்லும் கருத்தும் உங்களுடைய இப்போதைய கருத்தும் மாறியிருக்கின்றன. எப்படி?
திருவள்ளுவர் கிறித்தவரா புத்தகம் எழுதும் போது, இந்து மதம் பற்றி முழுமையாக எனக்குத் தெரியாது. அதன் பிறகு தான், இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு என்னும் புரிதல் எனக்கு வந்தது. இந்து மதம் என்பது தமிழர் சமயம் தான். நடைமுறையில் இந்து மதம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. பிற மாநிலங்களிலும்

திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர் என்றால் என்ன பொருள்?
திருவள்ளுவருடைய கருத்துகளில் கிறிஸ்தவக் கருத்துகள் இருக்கின்றன என்பது வேறு! திருவள்ளுவருடைய கருத்துகளின் அடிப்படையே கிறிஸ்தவக் கருத்துகள் என்பதால் தான் ‘திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்’ என்று சொல்கிறேன்.

(16.08.2020 அன்று இயங்கலை வழியே முனைவர் மு. தெய்வநாயகம் அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

Standard
தமிழர் சமயம்

கடவுளுடைய பிள்ளைக்குரிய குணங்கள் என்னென்ன?

இந்தக் கொரோனா காலத்திலும் நாம் எல்லோரும் நம்முடைய மீட்பராகிய இயேசு பெருமானைப் பற்றிச் சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் வாய்ப்பு தந்த அவருக்கே நன்றி.

இயேசுவின் அடியார்களுக்கு உரிய பெயர்கள் எப்படி இருந்திருக்கின்றன, எப்படி வளர்ந்திருக்கின்றன, அவற்றின் முழுப்பின்னணி என்ன என்று சிந்திப்போம்.

கிறிஸ்தவர் என்னும் பெயர் எங்கே தோன்றியது?

கிறிஸ்தவர்கள் என்னும் பெயர் சீடர்களுக்கு “அந்தியோகியா”வில் உருவாகியதாக அப்போஸ்தலர் 11:26 சொல்கிறது. எருசலேமில் தானே கிறிஸ்தவர்கள் என்னும் பெயர் உருவாகியிருக்க வேண்டும்? அப்படியானால் எருசலேமில் சீடர்களுக்கு என்ன பெயர் இருந்திருக்க வேண்டும்? அந்தியோகியா கிரேக்கர்கள் பலர் வாழும் நகரம். அங்கு அவர்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

எருசலேமில் சீடர்களுக்கு என்ன பெயர்?
புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. அதனால் கிறிஸ்தவர்கள் என்னும் பெயர் நிலைத்து விட்டது. இயேசுவை தேவன் எழுப்பினார். இதற்கு நாங்கள் எல்லோரும் சான்றுகளாக இருந்தோம் என்று அப்போஸ்தலர் 2:12 சொல்கிறது. அப்படியானால், எருசலேமில் சீடர்களுக்கு என்ன பெயர் இருந்திருக்கிறது என்று தெரிகிறது அல்லவா? “சான்றுகள்”! இப்படிச் சான்று கூறுபவர்கள் தாம், சான்றோர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

பிசிராந்தையார் சொன்ன சான்றோர்:
புனித தோமா, சான்றோர் என்னும் சொல்லைத் தமிழகத்திற்குக் கொண்டு வருகிறார். பிசிராந்தையாரிடம் போய் ஏன் உங்களுக்கு நரை வரவில்லை என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், “ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்” என்று அவர் விடை சொல்கிறார். கிறிஸ்தவர்கள் என்பதற்கும் சான்றோர் என்பதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. சங்க இலக்கியங்களிலும் அதன் பின் வந்த திருக்குறளிலும் இந்தச் சான்றோர் என்னும் சொல் மிகச் சிறப்பாக விளக்கப்படுகின்றது.

திருவள்ளுவர் கூறும் சான்றாண்மை:
சான்றோரின் கொள்கை சான்றாண்மை. இதற்குத் திருவள்ளுவர் ஓர் அதிகாரமே ஒதுக்கிப் பத்துத் திருக்குறள் பாடியிருக்கிறார். சான்றாண்மையின் அடிப்படை சால்பு. சால்பு என்றால் நிறைவு. எந்த நிறைவு? பரிசுத்த ஆவியின் நிறைவு! பரிசுத்த ஆவியைத் திருவள்ளுவர் விளக்குகிறார். பரிசுத்த ஆவியை ஒருவன் பெற்றிருக்கிறான் என்றால் அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்தும் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இந்த ஐந்துக்கும் ஒவ்வோர் அதிகாரம் எழுதியும் வைத்திருக்கிறார்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

என்கிறார் திருவள்ளுவர். அன்புடையவர்கள், தன் எலும்பையும் மற்றவர்களுக்குக் கொடுப்பார்கள். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பது இலக்கணம். இந்த இலக்கணத்திற்கு இலக்கியமாக இருப்பவர் இயேசு பெருமான் என்று திரு வி.க. பாடுகிறார்.

நாணம் என்றால் குற்றம் செய்ததற்கு வருந்தி நாணுவது. ஒப்புரவு என்று சொன்னால் இயேசு பெருமானை அனுபவிக்கிற பிள்ளைகள், கடவுளோடும் ஒப்புரவு கொண்டிருப்பார்கள், மனிதர்களுடனும் ஒப்புரவு கொண்டிருப்பார்கள். கண்ணோட்டம் என்றால் மன்னித்தல். மற்றவர்கள் எவ்வளவு துன்பம் செய்தாலும் மன்னிப்பு கேட்பவர்களை மன்னிக்கிற பக்குவம் இயேசு பெருமானின் பிள்ளைகளுக்கு உண்டு. மன்னிக்காதவன் இயேசு பெருமானின் பிள்ளைகள் அல்லர். வாய்மை – நற்செய்தி அறிவித்தல்.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.

என்கிறார் திருவள்ளுவப் பெருந்தகை. கடவுளைப் பற்றிச் சொல்வதை அனுபவித்துச் சொல்ல வேண்டும். கூலி பெற்றுச் சொல்வது போலச் சொல்லக் கூடாது.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

யாதொன்றும் தீமை இலாதது எது? கடவுளுடன் கூடிய அனுபவம் மட்டுமே யாதொன்றும் தீமை இலாததாக இருக்கும். இதை எல்லாம் பார்த்து, நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? என்பதை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

திருக்குறள் வழியாக நற்செய்தியைச் சொல்லும் போது எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். திருக்குறள் உலகப் பொதுமறை. கடவுள் மனிதனாக வந்து தன்னைப் பலியாகக் கொடுத்து நம்மை மீட்டு பரிசுத்த ஆவி மூலம் வழிநடத்துவது தான் உலகப் பொது உண்மை. நம்முடைய வார்த்தைகள் முக்கியமல்ல! வாழ்க்கை தான் முக்கியம்! நாம் சொல்வதற்கும் செய்வதற்கும் எப்படி ஒற்றுமை இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதற்கு இயேசுபெருமானை நம் உள்ளத்தில் அனுபவிக்க வேண்டும். அந்த அனுபவத்தை நமக்குக் கொடுப்பவர் பரிசுத்த ஆவியானவர்.

வாய்மை அதிகாரத்தில்,

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்குமெனின்.

திருவள்ளுவர் பொய் சொல்லச் சொல்கிறாரா? இல்லை. உள்ளத்தில் நாத்திகராக இருப்பவர் கூட சுய நலத்தைக் கருதி, மேடை ஏறிக் கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை அது பொய். ஆனால் கேட்பவர் அது உண்மை என்று நினைப்பார் அல்லவா!

கேள்விகள்:

இயேசுவைப் பின்பற்றி நீங்கள் என்ன வாழ்க்கை வாழ்ந்துவிட்டீர்கள்? நீங்கள் துன்பத்தில் தானே இருக்கிறீர்கள்? இதற்கு எப்படிப் பதில் சொல்வது?

இப்படிக் கேட்பவர்களுக்கு அடிப்படை உண்மை தெரியாது. இந்த உலகத்தில் பணக்காரராக, எல்லோரும் பாராட்டும் படி இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் தெரியும்.

பாடுபட்டு பணத்தைப் புதைத்து வைக்கும் கேடுகெட்ட மனிதரே கேளுங்கள்
கூடுவிட்டு ஆவி தான் போனபின்னர் யாரே அனுபவிப்பார் அந்தப் பணம்?

என்று பாடல் இருக்கிறது. உடல் உங்களுக்குத் தெரியும்! உயிர் தெரியும்! ஆன்மாவைப் பற்றித் தெரியுமா? என்று அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியாது என்பது தான் பதிலாகக் கிடைக்கும்.

எல்லோருக்கும் வருகிற துன்பம் எங்களுக்கும் வருகிறது. ஆனால் அந்தத் துன்பம் எங்களை ஆட்கொள்வதில்லை. மகிழ்ச்சியோடு இருக்கிறோம். இந்த உலகத்தில் மட்டுமில்லை, மறுமையிலும் நாங்கள் மகிழ்ச்சியோடு இருப்போம். இப்படி அவர்களால் சொல்ல முடியுமா? என்று கேட்டு அவர்கள் மனம் புரிந்து கொள்ளும் வகையில், ஏற்றுக் கொள்ளும் வகையில், பகுத்தறிவு வழியில் சொல்ல வேண்டும். அதற்குத் தமிழர் சமயம் வழி காட்டுகிறது. சைவமும் வைணவமும் மிக அருமையாகச் சொல்லிக் கொடுக்கிறது.

ரோமர் 8:28இல் ‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.’ என்பதை நாம் அனுபவிக்கிறோம். அதை அனுபவிக்கும் போது துன்பங்கள் நம்மை ஆட்கொள்வதில்லை.

கடவுளை அனுபவிக்க நடைமுறையில் என்ன செய்ய வேண்டும்?
“கேளுங்கள் அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும், தட்டுங்கள் அப்போது திறக்கப்படும்” என்றால் எதைக் கேட்க வேண்டும்? பரிசுத்த ஆவியை மட்டும் தான் கேட்க வேண்டும். “பரிசுத்த ஆவியானவர் என் உள்ளத்தில் வீற்றிருந்து விடாமல் வழிநடத்த வேண்டும்” என்பதைக் கேட்க வேண்டும். வேறெதுவும் நிலையான மகிழ்ச்சியைக் கொடுக்காது. அது தான் மிகப்பெரிய ஆசி! என் மகள் முனைவர் தெ. தேவகலா புற்றுநோயால் இறந்து போனார். அவர் இறந்தது – கடவுளுடைய சித்தம்! தேவகலாவிற்கு இவ்வுலகப் பணி போதும் என்று கடவுள் நினைத்திருக்கிறார். கடவுள் என் மகளை எடுத்துக் கொண்ட போது நான் கொடுத்த சான்று, பலருடைய சிந்தனையைக் கிளறியதாக நான் அறிகிறேன்.

இயேசு பெருமானின் பிள்ளைகள் தங்களுடைய வாழ்க்கையைச் சரியான படி வாழ முடியாமல் வீழ்ச்சி அடைவது உலகத்தையே வீழ்ச்சி அடைய வைக்கும் என்று திருவள்ளுவர் சொல்கிறார். “சான்றவர் சான்றாண்மை குன்றின்” என்பது திருக்குறள்.

ரோம ஆட்சியில் இருந்து யூதர்கள் விடுதலை அடையப் போராடியவர்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் என்று சொல்வது அரசியலுக்கு உரியது. அரசியல் என்பதே தோன்றி மறையும் ஒரு கானல்நீர். கிறிஸ்தவர்களின் தலைவராக இருக்கும் போப்பாண்டவர் – ஓர் அரசியல் தலைவர். வத்திக்கான் நகரத் தலைவர். கத்தோலிக்கர்களும் அவர்களிடம் இருந்து பிரிந்த புராட்டஸ்டண்டுகள், பிறகு பெந்தேகொஸ்தேக்கள் ஆகியோரும் கிறிஸ்தவர்களாகவே தங்களைக் கருதுகிறார்கள். அரசியலுக்கு உரிய கூட்டம் சேர்க்கிறார்கள். மதம் மாற்றுகிறார்கள். இதை இயேசு பெருமான் வெகுவாகக் கண்டிக்கிறார்.

அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாதவர்கள் கடவுளை அனுபவிப்பது எப்படி?

பொருள் இல்லை என்று ஏங்குகிற ஏக்கம் கடவுளுடைய அருளைப் பெறாதவர்களுடையது. கடவுளுடைய அருளை அனுபவிக்கிற பிள்ளைகளுக்குப் ‘பொருள் இல்லை’ என்னும் ஏக்கம் இருக்காது. ஏனென்றால் எது தேவையோ அது கொடுக்கப்படும்.

பாவம் என்பதன் விளக்கம் என்ன?
“செய்யத்தக்க நன்மையைச் செய்யாமல் இருப்பதே பாவம்”. பாவத்தின் சம்பளம் மரணம். மரணம் என்பது ஆன்மீக மரணம்.

Standard
தமிழர் சமயம்

கிறிஸ்தவர் என்னும் பெயர் எப்போது உருவானது?

கிறிஸ்தவர் என்னும் பெயர் எப்போது உருவானது? இயேசு பெருமானைப் பின்பற்றியவர்களுக்கு முதலில் கிறிஸ்தவர் என்னும் பெயர் கிடையாது. அவர்கள் பரிசுத்த ஆவி நிரம்பியவர்களாக (சால்பு+ஆர்), இயேசு பெருமான் வாழ்க்கையை ஆண்மையுடன் சான்று கூறி(சான்று+ஆண்மை), மற்றவர்களுக்குச் சான்று கூறி (சான்று+அவர்) வாழ்ந்தவர்கள்.இதைத் தான் வடமொழியில் ‘சாட்சி’ என்று சொன்னார்கள்.

பைபிளில்:

“நீங்கள் என் சாட்சிகள்” அப்போஸ்தலர் 1:8

”நாங்கள் எல்லோரும் சாட்சிகள்” அப்போஸ்தலர் 2:32, 3:15, 5:32

எப்போது கிறிஸ்தவர் என்னும் பெயர் வந்தது?

கிறிஸ்தவர் என்னும் பெயரே அந்தியோகியாவில் தான் உருவானது. எருசலேமில் உருவாகவில்லை. எருசலேமில் அவர்களுக்குச் சாட்சிகள் என்று பெயர். சாட்சி என்பதற்குத் தமிழில் சான்றோன் என்று பெயர். சான்றோன், ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் என்று தமிழ் இலக்கியங்கள் முழுக்க இப்படிப்பட்ட சான்றுகளைப் பார்க்க முடியும்.

Standard