தமிழ்

பெரியார் – இந்துக்களின் எதிரி தானே?

பெரியார் இந்துக்களின் எதிரி தானே!

எதை அடிப்படையாக வைத்து இதைச் சொல்கிறீர்கள்?

சின்ன குழந்தைக்குக் கூடத் தெரியும் அவர் இந்துக்களை மட்டும் தான் விமர்சிப்பார். கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் விமர்சிக்க மாட்டார் என்று! அதை அடிப்படையாக வைத்துத் தான் சொல்கிறேன்.

பெரியார் பிறந்ததில் இருந்து இறந்தது வரை ஓர் இந்து தானே! ஓர் இந்து, தன்னுடைய சொந்த மதத்தை விமர்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது! ஓர் இந்து, பிற மதத்தினரை விமர்சிப்பது தானே, மதக்கலவரத்தைத் தூண்ட வழி வகுக்கும். இதில் பெரியார் செய்த தவறாக எதைச் சொல்கிறீர்கள்?

என்ன இருந்தாலும் அவர் நம்முடைய இந்து மதத்தை மட்டும் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தி விட்டார் தானே!

அப்படி அவர் என்ன அவமானப்படுத்தினார்? கொஞ்சம் சொல்லுங்களேன்.

ஒன்றா! இரண்டா! எத்தனையோ சொல்லலாம். இராமர் சிலைக்குச் செருப்பு மாலை போட்டார் என்று நடிகர் இரஜினிகாந்த் கூடக் கொஞ்ச நாளைக்கு முன்பு சொன்னாரே!

நடிகர் இரஜினிகாந்த் பெரிய நடிகர். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காகத் தமிழ்நாட்டில் நடந்ததாக அவர் சொல்லும் கருத்துகள் எல்லாம் உண்மை என்றாகி விடுமா? அவர் இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்வது 1971இல் சேலத்தில்! உங்களுக்கே தெரியும் – நடிகர் இரஜினிகாந்தின் சொந்த மாநிலம் கர்நாடகம். அவருடைய முதல் படம் ‘அபூர்வ ராகங்கள்’. அந்தப் படம் வெளிவந்தது 1975இல். அதாவது, இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட ஆண்டில் அவர் தமிழ்நாட்டிலேயே இல்லை.

தமிழ்நாட்டில் அவர் இல்லை என்பதால் அவர் சொன்னது பொய்யாகி விடுமா!

நல்ல கேள்வி! பொய்யாகி விடாது தான்! அந்தக் காலத்தில் வந்த, இப்போதும் பெரியார் எதிர்ப்பு பத்திரிக்கைகளாக வெளிவந்து கொண்டிருக்கின்ற தினமணி, துக்ளக் ஆகியவற்றில் நீங்களே தேடிப் பாருங்கள். ஓரிடத்தில் கூட, இராமர் சிலைக்குச் செருப்பு மாலை போட்டதாகச் செய்தி கிடையாது.

சரி! ஆனால், அப்போது இராமர் சிலையை நிர்வாணமாகக் கொண்டு வந்தார்களே!

இராமர் சிலைக்குச் செருப்பு மாலை போடப்பட்டது என்பது அண்டப் புளுகு என்றால், இராமர் சிலையை நிர்வாணமாகக் கொண்டு வந்தார்கள் என்பது ஆகாசப் புளுகு. 2017இல் துக்ளக்கில் இருந்து, இந்தச் சம்பவங்களைப் பற்றிப் புத்தகமே வெளியிட்டிருக்கிறார்கள். பெரியார் எதிர்ப்பு இதழிலேயே இல்லாத வடிகட்டிய பொய் இது!

நீங்கள் சொல்வது பொய் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். பிறகு எப்படி, அந்த ஊர்வலத்திற்குப் பிறகு, இந்துக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த திமுக, தேர்தலில் படுதோல்வி அடைந்தது?

கேட்கிறவன் கேனையன் என்றால், கேப்பையிலும் நெய் வடியும் என்பார்கள். அந்தக் கதையாக இருக்கிறது உங்கள் கற்பனை. 1967இல் திமுக ஆட்சிக்கு வரும் போது அவர்களிடம் இருந்த சமஉகளின் எண்ணிக்கை 138. இந்தச் சம்பவம் நடந்ததாக நீங்கள் சொல்கிறீர்களே, அதற்குப் பிறகு நடந்த தேர்தலில்

திமுக சமஉகளின் எண்ணிக்கை 183.

பிறகு ஏன் நடிகர் இரஜினிகாந்த் இப்படிப்பட்ட கருத்தைச் சொன்னார்?

இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். திரைத்துறையில் நேர்மையாகவும் வருமானவரி நேர்மையாகச் செலுத்திக் கொண்டும் இருப்பது பொதுவாகவே கொஞ்சம் கடினம். ஏனென்றால் நிறைய கருப்புப்பணம் புழங்கும் துறைகளுள் அதுவும் ஒன்று. எனவே, நடிகர்கள் போன்றோரை வளைப்பது எப்போதுமே ஆளும் தரப்புக்கு மிக எளிது. அவருக்கு என்ன நெருக்கடி கொடுக்கப்பட்டதோ யாருக்குத் தெரியும்?

சரி! நீங்கள் சொல்வது ஓரளவு நம்புவது போல் தான் இருக்கிறது! அதற்காகப் பெரியாரை ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா!

ஏன் முடியாது என்று சொல்கிறீர்கள்?

அவர் இந்து மதத்தைக் கடுமையாக விமர்சித்தாரே!

என்ன விமர்சித்தார் என்று கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.

சாதி இல்லை என்று சொன்னாரே!

ஆமாம். இதைப் பெரியார் மட்டும் சொல்லவில்லையே! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொன்னார்.

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதிவழுவா நெறிமுறையின் மேதினியில்,

இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி.”

என்று ஒளவையார் பாடியிருக்கிறார். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாளுமே” என்று திருமூலர் பாடியிருக்கிறார்.

“பறைச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா

இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ

பறைச்சி போகம் வேறதோ,பணத்தி போகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுத்துப் பாரும் உம்முளே.”

என்று சிவவாக்கியர் கடுமையாகப் பாடியிருக்கிறார்.

“சாதி! குலம்! பிறப்பு! என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்

ஆதம் இலி நாயேனை!” என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். “சாதி மதம் என்னும் சழக்கு” என்று இராமலிங்க வள்ளலார் சொல்லியிருக்கிறார். இவர்கள் சொன்னதைத் தானே பெரியாரும் சொல்லியிருக்கிறார்.

இவர்கள் எல்லோரும் கடவுளை மறுக்கவில்லை. சாதி, மதத்தை மட்டும் தான் எதிர்த்துப் பேசினார்கள். ஆனால், பெரியார் கடவுளே இல்லை என்று சொல்லியிருக்கிறாரே!

பெரியார் கடவுள் இல்லை என்று எங்கே சொன்னார்?

என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? கொஞ்சமாவது நியாயமாகப் பேச வேண்டாமா! பெரியார் சிலைகளின் கீழ், “கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டிஎன்று எழுதி வைத்திருக்கிறார்கள். விவரமே தெரியாதது போல, இப்படிப் பேசுகிறீர்களே!

ஆமாம். எழுதி வைத்திருக்கிறார்கள். பெரியார் எந்தக் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொன்னார்?

இதென்ன கேள்வி! நாம் வணங்கும் சிவலிங்கத்தைத் தான்!

சரி தான்! நீங்கள் சொல்வது! சிவலிங்கம் என்பதில் லிங்கம் என்பதன் அர்த்தம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா!

தெரியாது! சொல்லுங்கள்!

இலங்குதல் என்றால் தோன்றுதல், அதாவது, கடவுள் முதலில் தோன்றினார். அவர் நம்மைப் படைத்தார் என்று அர்த்தம்.

சரி! அதை எதற்கு இப்போது சொல்கிறீர்கள்?

பெரியார் காலத்தில், இந்தச் சிவலிங்கத்தைப் பார்த்து ஆண்குறி என்று சொன்னார்கள். என்ன இப்படி எங்கள் கடவுளை அசிங்கப்படுத்துகிறீர்கள் என்று கேட்டால், ஆமாம், எங்கள் வேதத்தில் இப்படித் தான் இருக்கிறது. ஆதி சங்கரர், உங்கள் சிவனைச் ‘சிசுன தேவன்’ என்று இழிவாகத் தானே சொல்லியிருக்கிறார் என்றும் சொன்னார்கள். இதைப் பார்த்த பெரியார், ஒருவன் லிங்கத்தைப் பார்த்து ஆண்குறி என்கிறான். அதைப் போய், இந்த மக்கள் கண்டிக்க மறுக்கிறார்கள். மாறாகச் சொன்னவன் தான், இந்து மதத்தின் உயர்ந்த சாதி என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவனிடம் கைகட்டி சேவகம் செய்கிறார்கள். இப்படியா ஒரு கடவுள் இருப்பார்!

ஏனடா! ஒருவனைக் கீழ்ச்சாதி என்கிறீர்கள்! இன்னொருவனை மேல் சாதி என்கிறீர்கள்! எப்படி இந்தப் பிரிவினை வந்தது? என்று கேட்டார் பெரியார். அவரிடம், ‘கடவுளே எங்களை அப்படித்தான் படைத்திருக்கிறார். தோளில் இருந்து, தொடையில் இருந்து – அத்தனை பொய்களையும் அவிழ்த்து விட்டார்கள். ‘ஐயய்யோ! சாதியையும் மதத்தையும் படைத்த இந்தக் ‘”கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்று சொன்னார் பெரியார். இதில் தவறு என்ன இருக்கிறது?

ஆனாலும் அவர் கிறிஸ்தவர்களையும் முஸ்லீம்களையும் கண்டிக்கவில்லையே!

ஆமாம்! இந்த நாட்டின் பெருவாரியான மக்கள் இந்துக்கள். அவர்கள், சாதி ஏற்றத்தாழ்வையே கடவுள் தான் கொண்டு வந்தார் என்றும் தாங்கள் கஷ்டப்படுவதற்கும் கடவுள் தான் காரணம் என்றும் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவித்தால் தான் இந்தியா முழுமைக்கும் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு விடுதலை கிடைக்கும். ஓர் உண்மையான இந்துவாக, அவர் தன் மதத்தில் இருக்கும் கசடுகளை நீக்க முயன்றிருக்கிறார். அண்ணல் அம்பேத்கர் சாதி ஏற்றத்தாழ்வுக்கொடுமை தாங்க முடியாமல் மதம் மாறிய போது கூடப் பெரியார், மதம் மாற மாட்டேன். இங்கேயே இருந்து தான் இதைத் திருத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சரி தானே அது! அதில் என்ன தவற்றை உங்களால் பார்க்க முடிகிறது.

தீபாவளியைக் கொண்டாடாதே என்று சொல்லும் பெரியார், கிறிஸ்மஸ் கொண்டாடாதே! பக்ரீத் கொண்டாடாதே என்று சொன்னாரா?

ஆமாம். வட இந்தியா முழுவதும், தீபாவளி என்பது தமிழனாகிய இராவணனை, சத்திரியனாகிய இராமன் கொன்ற நினைவுநாள் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த மூட நம்பிக்கையை மாற்றாவிட்டால், தமிழனைக் கொன்றதைத் தமிழனே கொண்டாடுவது போல் ஆகிவிடுமே என்று அப்படிச் சொன்னார். இதில் தவறேதும் இல்லையே!

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்,

“சாமி கும்பிடுவதற்கு“ எதிரானவரல்லர் தந்தை பெரியார்!

“கும்பிடுறேன் சாமி” என்பதற்கு எதிரானவரே தந்தை பெரியார்!

இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், கீழவெண்மணியில் தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட போது பெரியார் அதை ஆதரித்தாரே!

பெரியாரை எதிர்ப்பவர்களின் புளுகுகளில் இதுவும் ஒன்று. கீழவெண்மணி படுகொலை நடந்த போது பெரியாரின் வயது 90. அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து, செம்பனார் கோவிலில் நடந்த கூட்டத்தில் கீழ்வெண்மணி கலவரம் பற்றிப் பேசினார். பொதுவாக கூலி உயர்வுப் போராட்டங்களை பெரியார் ஆதரிக்கவில்லை. தொழிலாளர்கள் பங்குதாரர்கள் ஆவதுதான் முக்கியம் என்பதே பெரியாரின் நிலைப்பாடு.

நீங்கள் நரகலை விட மோசமாக மனிதர்களை நடத்துகிறீர்கள் என்று அவர் தான் சொன்னார். நரகலைக் கூட மிதித்து விட்டு காலை மட்டும் தான் கழுவுவீர்கள். ஆனால் இவர்களைத் தொட்டால் உடலையே கழுவ வேண்டும் என்று சொல்கிறீர்களே! இது கொடுமையல்லவா! என்று கேட்டவர் அவர்.

சரி, பெரியார் இந்துக்களின் எதிரி இல்லை தான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவர் தமிழர்களின் எதிரி தானே!

அவர் தமிழர்களின் எதிரி என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லியிருக்கிறாரே!

அவர் காலத்தில் தமிழின் அருமை பெருமைகள் வெளிவரவே இல்லை. பெரியார் காலத்திற்குப் பிறகு, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் – உலகின் முதல் மொழி தமிழ் தான் என்று நிறுவியிருக்கிறார். இந்து மதம் என்பது தமிழர்களின் மதம் என்று முனைவர் தெய்வநாயகம் நிறுவியிருக்கிறார். தமிழர் எண்ணியல் என்றும் தமிழரின் தொன்மம் என்றும் அறிஞர் குணா எழுதியிருக்கிறார். சிந்து வெளி நாகரிகம் முந்து தமிழ் நாகரிகம் என்று நிறுவப்பட்டிருக்கிறது. கீழடி அகழ்வாராய்ச்சி வெளிவந்திருக்கிறது. ஆனால் பெரியார் காலம் எப்படி இருந்தது? தமிழ் வாழ்க என்று சொல்லியவர்கள் கூடத் தமிழர் வாழ்க என்று சொல்ல மாட்டார்கள். அந்த அளவு, தமிழர்களுக்குள் சாதி ஏற்றத்தாழ்வு இருந்தது. திருநெல்வேலியில் நடந்த சைவ சமய மாநாட்டில், சாதியைக் காரணம் காட்டியே, தமிழ்த்தென்றல் திரு வி.க. வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த அளவு தமிழர்கள் சாதி வெறியில் ஊறிப் போய் இருந்தார்கள். சித்தர்கள் கருத்துகள், வள்ளலார் கருத்துகள், திருக்குறள் ஆகியவற்றுக்குப் போதுமான முன்னுரிமை இல்லாமல் இருந்தது. எல்லா மூட நம்பிக்கைகளையும் சாதி வெறியர்களும் மதவெறியர்களும் தமிழ் மேல் ஏற்றிச் சொன்னார்கள். பெரியார் ஒரு தமிழறிஞர் கிடையாது. இந்த வெறியர்களின் செயலைப் பார்த்து, தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். பெரியாரும் அவர் வழி வந்தவர்களும் வெளி வந்து தான், தமிழர்களின் தொன்மைச் சொத்து திருக்குறள் என்பதே வெளியே தெரிந்தது.

பெரியார் இந்திய விடுதலைத் திருநாளாகிய ஆகஸ்ட் 15ஐயே கருப்பு நாள் என்று சொன்னவர். அவரைப் போய் ஆதரிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே!

அப்படிச் சொன்ன பெரியார், விடுதலைப் போராட்ட வீரர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பெரியார் விடுதலைப் போராட்ட வீரரா? யார் காதில் பூசுற்றப் பார்க்கிறீர்கள்?

யார் காதிலும் பூசுற்ற வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. 1919ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார் பெரியார். 1920ஆம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து, பஞ்சாலையை மூடி விடுகிறார். தம்முடைய வணிகத்தையும் நிறுத்தி விடுகிறார். ஒரு கிராம் தங்கத்தின் விலை இப்போது 4500 ரூபாய். நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட 90 ரூபாய். அப்போது இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்ததால் பெரியாருக்கு 20000 ரூபாய் நட்டம். 1921ஆம் ஆண்டில் பெரியார், கதர் இயக்கத்தில் சேர்ந்து கதர் அணிகிறார். அதன் பிறகு, கள் ஒழிப்புப் போராட்டத்தில் பங்கெடுத்து 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி விடுகிறார். நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு 50000 ரூபாயை இழந்தவர் பெரியார். 1924இல் கேரள மாநிலம் வைக்கத்தில் ஆலய நுழைவுப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இப்படிப்பட்ட பெரியாரையா – விடுதலைப் போராட்ட வீரரா என்று கேட்கிறீர்கள்.

பிறகு ஏன் அவர் ஆகஸ்ட் 15 ஆம் நாளைக் கருப்பு நாள் என்று அறிவித்தார்?

ஆமாம். பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். நம் மக்களுக்குப் போதிய படிப்பும் இல்லை. இப்படிப்பட்ட மக்களுக்கு விடுதலை என்பது வெறும் கண்துடைப்பாகத் தானே இருக்கும். மேல் இருக்கும் வெள்ளைக்காரர்கள் மாறிக் கொள்ளைக்காரர்கள் வந்து விடுவார்கள் என்று பயந்தார் பெரியார். அதனால், கொஞ்ச நாள், நம் மக்களுக்குக் கல்வி எல்லாம் கொடுத்த பிறகு, விடுதலை வாங்கலாமே என்பது அவருடைய எண்ணம். நீங்களே சொல்லுங்கள் – ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கே, நாடே திரண்டு போராடினால் தான் வெற்றி கிடைக்கிறது. அந்த அளவில் தானே நம் நாட்டின் ஜனநாயகம் இருக்கிறது! அவர் சொன்னது போலத் தானே நடந்திருக்கிறது.

பெரியார் ஏன் பிராமணர்களை எதிர்த்தார்?

நாம் எல்லோரும் வணங்கும் சிவலிங்கத்தை ‘சிசுன தேவர்’ என்று ஆதிசங்கரர் இழிவாகப் பேசினார். வேதம் அதை ஆண்குறி என்று பகடி செய்தது. இந்தக் கருத்துகள் இரண்டும் சரி தான் என்று பிராமணர்கள் சொன்னார்கள். இப்படிச் சொல்லி நம் மக்களின் ஆன்மீகத்தை இழிவுபடுத்தும் பிராமணர்களை எதிர்த்ததில் என்ன தவறு சொல்கிறீர்கள்? பெரியார் மட்டுமா அப்போது பிராமணர்களை எதிர்த்தார் –

“சூத்திரனுக்கொரு நீதி – தண்டச் சோறுண்ணும்

பார்ப்புக்கு ஒரு நீதி – இதைச்

சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம்

அன்று சதி என்று கண்டோம்

என்று பிராமணர் சமூகத்தில் பிறந்த பாரதியாரே பாடியிருக்கிறாரே! பெரியாரும் பாரதியாரும் மட்டுமில்லை. திருமூலர், திருமந்திரத்தில்,

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி

ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்

பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்

பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே”

என்று பாடியிருக்கிறார். சுவாமி விவேகானந்தர், பிராமணர்கள் தாம் – இந்தியச் சமூகத்தில் சாதி என்னும் விசத்தைக் கொண்டு வந்த பாம்புகள் என்று எழுதுகிறார். இப்படிப் பல பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதில் பெரியாரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதில் என்ன இருக்கிறது?

பெரியார் வழி வந்த திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டைச் சீரழித்து விட்டார்களே!

என்ன சீரழித்து விட்டார்கள்?

என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? தமிழ்நாட்டில் இல்லாத ஊழலும் லஞ்சமுமா!

இந்தியத் தேர்தல் முறையே, பணக்காரர்கள் வெற்றி பெறுவது போல் தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதிலும் உள்ள ஊழல், லஞ்சம் ஆகியன தமிழ்நாட்டிலும் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அதில் தமிழகத்தை ஆண்ட கட்சிகளும் விதிவிலக்குகள் இல்லை. இந்தத் தேர்தல் முறையில் மாற்றங்கள் வராத வரை, ஊழலும் லஞ்சமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். காங்கிரசுக்கு 2ஜி என்றால், பாஜகவிற்கு 4ஜி அல்லது வியாபம் அவ்வளவு தான்! இன்னொரு கருத்து – பெரியார் ஓர் அரசியல்வாதி அல்லர்.

என்ன பெரியார் அரசியல்வாதி அல்லரா?

ஆமாம்! பெரியார் ஒரு காலத்திலும் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல் என்று போனால், சாதி, மதம் என்று பலவற்றையும் சமரசம் செய்து கொள்ள வேண்டியது வரும் என்று அவர் கடைசிவரை தேர்தல் பக்கம் போகவே இல்லை. எனவே, அவர் பெயரைச் சொல்லிச் சில அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளுக்கு அவரை எப்படிப் பொறுப்பாக்க முடியும்?

எல்லாம் சரி! என்ன இருந்தாலும் 70 வயதில் தன்னை விட 40 வயது சிறிய பெண்ணைப் பெரியார் திருமணம் செய்தது சரியா?

ஒருவர் எத்தனை வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை நாம் சொல்வது சரியா? இருந்தாலும் பெரியார், ஒரு பெரிய தலைவர் என்பதால் இதைக் கேட்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறேன்.

பெரியாருக்கு முதல் திருமணம் 1898இல் நடந்தது. நாகம்மையை மணந்தார். அவர் 1933ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். இவர்கள் இருவருக்கும் பிறந்த ஒரு பெண் குழந்தையும் மிகச்சிறு வயதிலேயே காலமாகிவிட்டது. இந்த நிலையில் மிகப் பெரிய பணக்காரராக இருந்த பெரியாரின் சொத்துகளுக்குச் சட்டப்படியான வாரிசு வேண்டும். அப்படிப்பட்ட வாரிசாக அதுவரை தமக்குப் பணிவிடை செய்து வந்த மணியம்மையை அமர்த்த விரும்பினார். பரம்பரைச் சொத்துகளை வேலைக்காரருக்குக் கொடுக்க முடியாது அல்லவா! எனவே, மணியம்மையை மணந்து, சொத்துகளைச் சுயமரியாதை இயக்கப் பணிகளுக்குச் செலவு செய்யச் சொன்னார். அவர் சொன்னது போலவே, பெரியாரின் எல்லாச் சொத்துகளும் இன்று வரை அவர் குடும்பத்தினரிடம் இல்லாமல், பெரியார் சுயமரியாதை நிறுவனத்திடம் இருந்து வருகிறது. இதை விடத் தன்னலமற்ற தலைவரை எங்கே பார்ப்பீர்கள்! சொல்லுங்கள்!

பெரியார், மணியம்மையைத் தத்தெடுத்திருக்கலாமே!

சரி தான் நீங்கள் சொல்வது! அப்போதைய இந்து சிவில் சட்டத்தின் படி, ஒரு பெண்ணுக்குத் தத்தெடுக்கும் உரிமையும் கிடையாது. தத்து போகும் உரிமையும் கிடையாது. எனவே, சொத்துகளை நிர்வகிக்க, மணியம்மையைத் திருமணம் செய்வதைத் தவிர, பெரியாருக்கு வேறு வழியில்லை.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பெரியார் உண்மையில் பெரியார் தான் போலத் தெரிகிறது! அவர் பெயர் இராமசாமி தானே! அவருக்கு மிகப் பொருத்தமான இந்தப் பட்டத்தை யார் கொடுத்தார்கள்?

1938ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நடந்தது. அதில் தான் பெரியாருக்கு இப்பெயரைக் கொடுத்தார்கள்.

நான் பெரியாரைப் பின்பற்ற நினைக்கிறேன் என்ன செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்ய வேண்டாம். ‘என்னைப் பின்பற்றுங்கள்’ என்று அவரே சொல்லவில்லை. ‘இந்த இராமசாமி என்ன சொன்னாலும் சரி – உனக்கு அறிவு இருக்கிறது. அதைப் பயன்படுத்து. எது சரி எது தவறு’ என்று பார்த்துச் செயல்படு’ என்று அறிவுறுத்தியவர் பெரியார். அதன் படி வாழ்வோம்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்று தானே திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார்.

பெரியார் –

“மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை! வானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் பெரியாரை”

– உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்

நன்றிக்குரியோர்:

பிபிசி தமிழ் இணையத்தளம்

https://en.wikipedia.org/wiki/List_of_Indian_states_and_territories_by_Human_Development_Index

https://www.bbc.com/tamil/india-49718507

https://www.hindutamil.in/news/spirituals/204431-26-2.html

https://www.dinamani.com/editorial-articles/2015/oct/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-1208414.html

https://valarumkavithai.blogspot.com/2014/09/blog-post_31.html

Standard
தமிழர் சமயம்

இந்து, இந்துக்கள், இந்துத்துவா, இந்து மதம் – ஒரு பார்வை

புனித தோமாவழித் தமிழர் சமயமே இந்து சமயம்!

கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் சீரியக் கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். அதாவது, இன்றைய கேரளத்திற்கு! அவர்களிடம் தோமாவின் செய்தி இருக்கிறதா எனத் தேடிய ஐரோப்பிய அறிஞர்கள் ‘ தோமா தமிழ்நாட்டுக்கு வரவில்லை’ என்னும் முடிவுக்கு வந்தார்கள். தோமா நற்செய்திப் பணியாற்றியது தமிழ்நாட்டில்! தேட வேண்டிய இடத்தில் தேடாமல் வேறு இடத்தில் தேடினால் உண்மை எப்படி விளங்கும்?

போப் 16ஆம் ஃபிடரிக்கும் அதையே சொன்னார். இவர்கள் யாருமே தமிழ்நாட்டில் இருக்கும் ஆன்மீகக் கருத்துகளை ஆராயவேயில்லை. தோமாவின் வழி வந்தவர்கள் – அவரைப் புதைத்த இடத்தில் கட்டிய கோவிலை ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இடித்தார்கள்.

கல்கத்தா நீதிமன்றத்தில் 1794இல் சர். வில்லியம் ஜோன்ஸ் என்னும் நீதிபதி, மனு நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து – இந்துயிசம் (Hinduism) என்னும் புதிய பெயரைக் கொடுத்தார். அது தான், இந்துத்துவா என்று இங்கு சொல்லப்படுகிறது. மனுநூல் கொள்கை என்பது மதம் அல்ல! அது சாதி ஏற்றத்தாழ்வைக் கூறும் நூல். நாங்கள் இந்துக்கள் என்று அவர்கள் சொல்வது நாங்கள் இந்தியர்கள் என்பதைத் தான் குறிக்கும். அவர்கள் இந்தியர்களா என்று கேட்டால் அதுவும் இல்லை. பிராமணர், வைசியர், சத்திரியர் மூன்றும் ஆரியர்களின் பிரிவுகள்.

இந்து:

இந்து என்னும் பெயரைப் பாரசீகர்கள் கொடுக்கிறார்கள். அவர்கள் சிந்து நதியைக் கடந்து வருகிறார்கள். சிந்து நதியை வைத்து சிந்துக்கள் என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ‘சி’ உச்சரிப்பு இல்லாததால், இந்துக்கள் என அழைக்கப்பட்டார்கள். எனவே சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்த மக்களைப் பொதுவாகக் குறிக்கும் வார்த்தை தான் இந்து என்பது! இது மதத்தைச் சொல்லும் வார்த்தை அல்ல. இடத்தைக் குறிக்கும் வார்த்தை.

இந்தியா:

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆள்வதற்கு முன் ‘இந்தியா’ என்னும் பெயரை, உலகவரலாற்றில் எங்கும் காண முடியாது.

இந்திய வழிபாடுகள்:

இந்தியாவில் இருந்த வழிபாடுகள். நினைவுக்கல் வழிபாடு, கந்து வழிபாடு என நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தவை.

இந்திய மதங்கள்:

மதம் என்றால் ஐந்து கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
1. பிறப்புக்கு முன் நான் இருந்தேனா?
2. அப்படியானால் எப்படி இருந்தேன்?
3. இறப்புக்குப் பின் நான் இருப்பேனா?
4. இருந்தால் எப்படி இருக்க வேண்டும்?
5. இந்த உலகத்தில் நான் வாழ வேண்டிய முறை என்ன?
ஆகியவை தாம் அந்த ஐந்து கேள்விகள்.

சமணம், பெளத்தம், சைவம், வைணவம், சீக்கியம். இந்திய மதங்கள் வேறு! இந்து மதம் என்பது வேறு! அண்ணல் அம்பேத்கர் – இந்து மதத்தில் இருந்து பெளத்த மதத்திற்கு மாறினார் என்பன போன்ற செய்திகள் இந்து மதம் வேறு, பெளத்த மதம் வேறு என்பதை உணர்த்தும்.

இந்து மதம்:
சைவ, வைணவம் இரண்டின் சேர்ப்புத் தான் இந்து மதம்!

இந்துத்துவா:
ஆரிய பிராமணர்களின் வாழ்க்கை முறை. நிறவெறிக் கொள்கையை வலியுறுத்தும் வாழ்க்கை முறை. இதை வாஜ்பாயி போன்ற இந்துத்துவத் தலைவர்களே பல முறை – “Hinduism is not a religion. It is a way of life. It is nothing to do with God.” என்று சொல்லியிருக்கிறார்கள்.

சைவத்தை வளர்த்த 63 நாயன்மார்கள், வைணவத்தை வளர்த்த 12 ஆழ்வார்கள் அனைவருமே தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆகியன தமிழ்மொழியில் தான் இருக்கின்றன. பழமையான சைவக் கோவில்கள் 280இல் 274உம், வைணவக் கோவில்கள் 108இல் 96உம் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. சைவத் தலைமைக் கோவில் சிதம்பரம், வைணவத் தலைமைக் கோவில் திருவரங்கம் ஆகியன தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. எனவே இந்து மதத்தைத் தமிழர் சமயம் என்று தான் சொல்ல முடியும்.

சமஸ்கிருதம்:

சமஸ்கிருதம் – நன்றாகச் செய்யப்பட்டது என்று அர்த்தம். அப்படியானால் செய்தது யார், எப்போது, எங்கு, எவ்வாறு? சமஸ்கிருதத்தை தோமாவழித் தமிழர் சமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் உருவாக்கினார்கள். கி.பி. முதல் நூற்றாண்டில் ஏற்பட்ட இயேசு பெருமானின் கருத்துகளைப் பரப்ப – ஒரு செயற்கை மொழி தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்ட மொழி தான் சமஸ்கிருதம். பாரசீகம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய ஏழு மொழிகளை இணைத்து உருவாக்கினார்கள். எங்கே உருவாக்கினார்கள்? காஞ்சிபுரத்தில்!

ஐந்து மதங்கள் இந்தியாவில் தோன்றின! எப்படி இரண்டு மட்டும் இந்து மதமானது?

இந்துத்துவாவால் பாதிக்கப்பட்ட மதங்கள் சைவமும் வைணவமும்! இந்துத்துவாவால் மற்ற மதங்கள் பாதிக்கப்படவில்லை.

இந்துத்துவாவால் மற்ற இந்திய மதங்களை விடச் சைவமும் வைணவமும் பாதிப்படையக் காரணம் என்ன?

சைவமும் வைணவமும் தோமா ஆற்றிய நற்செய்திப் பணியின் விளைவாக, தமிழ்நாட்டில் உருவானவை என்று பார்த்தோம். ஆனால் பிற்காலத்தில் தமிழர்கள் ஆட்சியுரிமையை இழந்தார்கள். மூவேந்தர்களும் முடியிழந்தார்கள். பிற்காலத்தில் முகலாயர்கள், நாயக்கர்கள் என வேற்றவர்கள் ஆட்சி புரியத் தொடங்கினார்கள். வேற்றவர் ஆட்சியில் தமிழர்கள் நலிவடைந்தார்கள். தமிழர்களுடைய உயர்ந்த கொள்கைகள் நசுக்கப்பட்டன. ஒன்றே குலம்! ஒருவனே தேவன் என்னும் கொள்கைகள் நசுக்கப்பட்டு, இந்துத்துவாக் கொள்கையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை புகுத்தப்பட்டது. இப்படித்தான்ன், சைவமும் வைணவமும் இந்துத்துவாவால் பாதிக்கப்பட்டன.

சமஸ்கிருதம் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்டதற்குச் சான்றுகள் என்னென்ன?

இலக்கியச் சான்றுகள் உள்ளிட்ட எல்லாச் சான்றுகளும் இருக்கின்றன. காஞ்சிபுரத்தில் இருந்து தான் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு அறிஞர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.   முதல் சைவக் கோவில் காஞ்சிபுரத்தில், முதல் வைணவக் கோவில் காஞ்சிபுரத்தில் தான்!

திருவள்ளுவர் காலம் எது?

திருவள்ளுவர் தோமாவிற்குப் பிற்காலத்தில் வந்தவர். தோமாவின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு. திருவள்ளுவர் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு.

திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்று அறிஞர்கள் வரையறுத்திருக்க நீங்கள் மாற்றிச் சொல்கிறீர்களே?

சங்க இலக்கியத்தின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை. திருக்குறள் சங்க இலக்கிய நூல்களுள் ஒன்று இல்லை. அப்படியானால் திருக்குறளின் காலம் என்ன? என்று சிந்திக்க வேண்டாமா? திருக்குறள் சங்க மறுவிய காலத்தில் எழுந்த நூல். அது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று – அதாவது கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்குப் பின்னால் எழுதப்பட்ட நூல் என்று வந்து விடுகிறது அல்லவா? இது தான் ஆராய்ச்சியாளர்களின் கருத்து!

தமிழர்களின் அரசியல் வீழ்ச்சி!
நந்தனாரும் திருப்பாணாழ்வாரும் கொலை செய்யப்பட்டது ஏன்? மன்னர்களை வீழ்த்துவதற்கு பிராமணர்களின் ஆயுதம் பெண்கள். தங்கள் வீட்டுப் பெண்களுக்கு நடனம், இசை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்து மன்னர்களை வீழ்த்திய வரலாறு அவர்களுடையது. வரலாறு மட்டுமல்ல, இன்று வரை அது தான் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கேள்வி கேட்டு அவர்களுக்கே “சங்கரமடத்திற்கு 108 கேள்விகள்”, “நந்தனாரையும் திருப்பாணாழ்வாரையும் கொலை செய்தது ஏன்” ஆகிய நூல்களைப் பதிவு அஞ்சலில் எழுதி அனுப்பியிருக்கிறேன். இன்று வரை பதில் இல்லை.

நம்முடைய ஒழுக்கம், நேர்மை, கொள்கை ஆகியவற்றில் நாம் உறுதியாக இருக்கிறோம். தமிழ், தமிழன், தமிழர் சமயம் என்பது உலகிற்கே முன்மாதிரியான வாழ்க்கை! ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது நம்முடைய கொள்கை.

ஆறு கெட, நாணல் விடு என்பது பழமொழி. ஊர் கெட, நூலை விடு – அதாவது பூணூலை விடு. பூணூல் – இரு பிறப்பாளர்களுக்கு உரியது. உள்ளம் மாறிப் பிறத்தல் என்பது இரண்டாவது பிறப்பு. அது கிறிஸ்தவத்திற்கு உரியது. கிறிஸ்தவக் கொள்கையின் விளைவு. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நான்கிலும் பூணூல் பற்றிய குறிப்பு கிடையாது. இந்தியக் கிறிஸ்தவத்தில் பூணூல் அணியும் மரபு இருக்கிறது. ஐரோப்பிய கிறிஸ்தவத்தில் பாதிரியார்கள் நிலை உயரும் போது ஏன் நாடாக்கள் அணிகிறார்கள். இந்த மரபெல்லாம் இப்படி ஒன்றோடொன்று தொடர்புடையது.

பைபிளில் வரும் முப்புரிநூல் என்பது எதைக் குறிக்கும்?
நீங்களும் உங்கள் மனைவியும் வாழும் போது கடவுள் உங்கள் மத்தியில் வாழ வேண்டும். அது தான் முப்புரிநூல். குடும்ப ஜெபம் இல்லாத வீடு, கூரை இல்லாத வீடு.

மறுபிறப்புக்குக் கொடுப்பது தான் ஞானஸ்நானமா?
இல்லை. மறுபிறப்பு ஆன பிறகு கொடுப்பது தான் ஞானஸ்நானம்.
பிராமணர்களுக்குப் பெண்கள் போகப் பொருள். அவர்கள் பெண்களுக்கு உரிய மதிப்புக் கொடுப்பதில்லை. அவர்கள் வெளிநாட்டினர். அவர்கள் படை எடுத்து வரும்போது பெண்களை அழைத்து வரவில்லை. எனவே, நம் நாட்டுப் பெண்கள் அவர்களுக்குப் போகப் பொருள் தான்! அவர்கள் பெண்களையும் போகப் பொருளாகத் தான் பார்த்தார்கள்.

தமிழர் சமுதாயம் தாய்வழிச் சமுதாயம். எனவே, இயல்பாகவே, பெண்களை மதிக்கும் வழக்கம் இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் நம்முடைய மரபு.

கிறிஸ்தவர்கள் என்னும் பெயர் எப்படி உருவானது?
கிறிஸ்தவர்களுக்கு இப்பெயரே அந்தியோகியாவில் தான் உருவானது. எருசலேமில் உருவாகவில்லை. எருசலேமில் அவர்களுக்குச் சாட்சிகள் என்று பெயர். சாட்சி என்பதற்குத் தமிழில் சான்றோன் என்று பெயர். சான்றோன், ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் என்று தமிழ் இலக்கியங்கள் முழுக்க இப்படிப்பட்ட சான்றுகளைப் பார்க்க முடியும்.

Standard